தமிழ்நாடு

சிகரெட் தர மறுத்ததால் பெட்டிக்கடைக்கு தீ வைத்த வாலிபர்கள்

webteam

ஓசியில் சிகரெட் தர மறுத்ததால் பெட்டிக்கடையை தீ வைத்துக் கொளுத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம், மண்டபத் தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவர் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் உள்ள மெட்ரோ வாட்டர் அலுவலகம் அருகே பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த இரண்டு வாலிபர் இப்ராஹிடம் ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர். இதனால் இப்ராஹிம் சிகரெட் தர மறுத்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் இருவரும், சிகரெட் தரவில்லையென்றால் நீ இங்கு கடையே வைக்க முடியாது எனவும்  கடையை தீ வைத்து கொளுத்தி விடுவோம் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு இப்ராஹிமும், உன்னால் முடிந்தால் செய்து பார் என பதிலுக்கு சவால் விடுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வாலிபர்கள் சென்று விட்டனர். வியாபாரம் முடிந்து இப்ராஹிம் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அங்கு வந்த அந்த வாலிபர்கள் கடைக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. பெட்டிக்கடை எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் உடனடியாக கடை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 

தகவல் அறிந்து வந்த போலீசாரிடம்  இப்ராஹிம் நடந்ததை விவரித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் டிபி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இரண்டு வாலிபர்களையும் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.