தமிழ்நாடு

பேக் வாங்குவது போல் கல்லாவில் பணத்தை எடுக்கும் நபர் - சிசிடிவியில் அம்பலம்

webteam

சென்னையில் உள்ள கடை ஒன்றில் பேக் வாங்குவது போல் நடித்து கல்லாவில் இருந்து பணத்தை லாவகமாக இளைஞர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை அடையாறு எல்பி சாலையில் கமலக்கண்ணன் என்பவர் கியூ பேக்ஸ் என்ற பெயரில் பேக் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு பேக்வாங்குவதற்காக வாடிக்கையாளர் போல் வந்த இளைஞர் ஒருவர் புதிய வடிவிலான விதவிதமாப பேக் வேண்டும் காட்டுங்கள் என கூறினார். இதனைத் தொடர்ந்து கடைக்காரரும் விதவிதமாக பேக்குகளை எடுத்து காண்பித்தார்.

நீண்ட நேரமாகியும் பேக் வாங்காமல் பேக்குகளை பார்த்துவிட்டு, அவர் கடையில் இருந்து பிறகு வருவதாக கூறி சென்று விட்டார். இதனால் சந்தேகமடைந்த கடைக்காரர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கடைக்கு வந்த இளைஞர் பேக் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை லாவகமாக திருடுவது பதிவாகியுள்ளது.

திருடு போன பணம் 200, 300, என்ற சொற்ப அளவில் இருந்ததால் கடைக்காரர் புகார் ஏதும் கொடுக்கவில்லை.