Murder pt desk
தமிழ்நாடு

சென்னை: அண்ணனை கொலை செய்ய வந்த கும்பல் - தம்பிக்கு நேர்ந்த விபரீதம்

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

சென்னை, கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மா (24). கூலித் தொழிலாளியான இவர், பணி முடித்துவிட்டு நேற்று இரவு தனது வீட்டருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் தர்மாவிடம் உனது அண்ணன் சூர்யா எங்கே எனக் கேட்டு மிரட்டி உள்ளனர்.

murder

அதற்கு தர்மா, பதில் கூற மறுத்ததை அடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தி, பாட்டில் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தர்மாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலை தடுக்க முயன்ற தர்மாவுடன் இருந்த அவரது நண்பர் கிஷோரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளது. இதையடுத்து தர்மாவை மீட்ட அவரது நண்பர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்த தர்மா சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த தர்மாவின் அண்ணன் சூர்யாவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழி தீர்க்க இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். தர்மாவை வெட்டிவிட்டு தப்பியோடிய நான்கு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அண்ணனை பழி தீர்க்க வந்த கும்பல் தம்பியை கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.