தமிழ்நாடு

"என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள்" - அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பிய பெண்..!

webteam

என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள் என அமைச்சர்களிடம் இஸ்லாமிய பெண் ஒருவர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகரில் கூட்டுறவு துறை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய தொடக்க விழா நடைபெற்றது. இதில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களை திறந்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து விழா மேடையில் கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது கூட்டுறவு வங்கி கடனாக ரூ.8 லட்சம் பெறுவதற்காக மேடைக்கு வந்த கூட்டுறவு சங்கத் தலைவி பாத்திமா, அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது “என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள்? இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.சி பற்றி ஏன் பேசவில்லை” என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர்கள் இருவரும் அமைதியாக இருக்குமாறும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பதிலளித்தனர். இதையடுத்து இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.