தமிழ்நாடு

வங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு..!

webteam

வேலூரில் வங்கிக்குள் வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரத்தை மற்றொரு பெண் திருடிச் சென்றார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த வாசு என்பவரின் மனைவி விஜயா. இவர் ஆம்பூர் சேர்மன் ராஜகோபால் தெருவில் அமைந்துள்ள கனரா வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வதற்காக வந்துள்ளார். முதலில் வங்கியில் ரூ.50 ஆயிரத்தை டெபாசிட் செய்து விட்டு அதை பதிவு செய்வதற்காக வங்கிக்குள் உள்ள பதிவிடத்திற்கு சென்றுள்ளார். அவரை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மற்றொரு பெண், அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

வங்கி புத்தகத்தை பதிவு செய்யப்படும் இடத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்த விஜயாவின் அருகே அந்தப் பெண்ணும் நின்று கொண்டிருந்துள்ளார். பின்னர் விஜயா அசந்த நேரத்தில் அவரது பையில் இருந்த ரூ.50 ஆயிரத்தை அப்பெண் திருடிச் சென்றுள்ளார். பணம் பறிபோனதை அறிந்த விஜயா, ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.