முத்து ரத்தினம் pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி | “CM Cellக்கு புகார் கொடுக்குறியா எனக்கூறி பெண் காவலர் அடித்தார்” மாற்றுத்திறனாளி பெண்

webteam

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர்கள் கணபதி - முத்து ரத்தினம் தம்பதியினர். இவர்களுக்கு பால்துரை என்ற மகனும், பிரம்ம முத்து என்ற மகளும் உள்ளனர். கணபதி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணான முத்து ரத்தினம் மிட்டாய் விற்று பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் பால்துரை கடந்த மார்ச் 21ம் தேதி சமையல் வேலைக்கு சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றுள்ளார். ஆனால், 23 ஆம் தேதி உங்கள் மகன் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

பால்துரை

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த முத்து ரத்தினம் மயக்கமடைந்துள்ளார். அப்போது அவரிடம் கையெழுத்தை வாங்கி மகனின் உடலை அடக்கம் செய்து விட்டனர். முத்து ரத்தினத்துக்கு சுயநினைவு வந்தபின், இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு யாரும் முறையான பதில் அளிக்காததால் சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தனது மகனின் இறப்பு சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வாங்குவதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அலைந்துள்ளார். ஆனால், மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் அலைக்கழித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இறப்பு பதிவு சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனால் முதல்வரின் தனி பிரிவுக்கு முத்துரத்தினம் புகார் அளித்துள்ளார்.

திருவைகுண்டம் அரசு மருத்துவமனை

இந்த நிலையில் நேற்றிரவு முத்து ரத்தினம் வீட்டிற்கு வந்த பெண் காவலர் ஒருவர், “நான்தான் உங்களுக்கு தேவையான நிவாரணத்தையும் சான்றிதழ்களையும் வாங்கித் தருகிறேன் என்று கூறினேன்? பின் எதற்கு முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அளித்தீர்கள்?” என்று கடுமையாக பேசி முத்து ரத்தினத்தின் முதுகில் அடித்துள்ளார். இதுகுறித்து 100 எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தை கூறியுள்ளார் முத்து ரத்தினம். இதையடுத்து முத்து ரத்தினத்தின் வீட்டிற்கு வந்து முறப்பநாடு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

முத்து ரத்தினத்தை தாக்கியது சிவந்திப்பட்டி காவல்நிலைய காவலரா? அல்லது முறப்பநாடு காவலரா என்ற விபரம் தெரியவில்லை. இதற்கிடையில் முத்து ரத்தினம் நெஞ்சுவலி காரணமாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நடந்த விவரத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெண் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.