செஞ்சி கோட்டை புதியதலைமுறை
தமிழ்நாடு

தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோலில், மாமல்லபுரம் வரிசையில் UNESCO புராதன சின்னமாகும் செஞ்சி கோட்டை?

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை யுனெஸ்கோவின் பாரம்பரிய புராதன சின்னமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபற்றி விரிவாக காணலாம்...

PT WEB

வரலாற்றின் சாட்சியமாக, 830 ஆண்டுகளை கடந்து நிற்கிறது செஞ்சி கோட்டை. தமிழ் நிலத்தில் மன்னர்கள் கட்டிய கோட்டைகளில் எஞ்சியிருக்கும் ஒரே அடையாளமாக இருக்கிறது ராஜா தேசிங்கின் இந்தக் கோட்டை. இங்கு தர்பார் மண்டபம், அந்தப்புரம், படைவீடுகள், யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், கோயில்கள், தானியக் களஞ்சியங்கள், ஆலயங்கள், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாளச் சிறை, மதில்சுவர், அகழி என ஒரு கோட்டைக்கான சகல அம்சங்களும் உள்ளன.

செஞ்சி கோட்டை

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை யுனெஸ்கோவின் பாரம்பரிய புராதன சின்னமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பைச் சேர்ந்த ஹவாங் ஜாங் லீ உள்ளிட்டோர் செஞ்சி கோட்டையை ஆய்வு செய்தனர். கோட்டையின் உறுதித் தன்மை, சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும்பொழுது, “இந்தியாவில் தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோலில், மாமல்லபுரம் சிற்பங்கள் போன்றவை உட்பட 42 இடங்கள் யுனேஸ்கோவின் பராம்பரிய அந்தஸ்தை பெற்றவையாக உள்ளன. சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகள், மராட்டிய மன்னர்களின் ராணுவ கேந்திரங்களாக இருந்தவை என்பதால் இவற்றை கலாசார ரீதியிலான உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிடம் மத்திய அரசு பரிந்துரைத்தது. அந்தப் பட்டியலில் உள்ள 11 கோட்டைகள் மகாராஷ்டிராவில் உள்ளன. எஞ்சியுள்ள ஒன்று, நம் தமிழ்நாட்டின் செஞ்சி கோட்டை” என்றார்.

செஞ்சி கோட்டை

வரலாற்று ஆய்வாளர் முனுசாமி நம்மிடையே பேசும்பொழுது, “செஞ்சி ராஜா தேசிங்கின் செஞ்சி கோட்டையையும், அருகிலுள்ள ராணி கோட்டையையும் இணைக்கும் வகையில் ரோப்கார் சேவை கொண்டு வர வேண்டும்” என்றார்.

இதேபோல தேசிங்கு ராஜா-வுக்கு மணிமண்டபம், செஞ்சி கோட்டைக்கு செல்லும் சாலையின் இரு புறங்களிலும் வண்ண வண்ண பூக்களை கொண்ட மரங்களை வளர்த்தல் போன்ற பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கின்றனர் செஞ்சி மக்கள்... விரைவில் செஞ்சி கோட்டை யுனெஸ்கோவின் அங்கீகாரத்தை பெறும் என்று ஆர்வமாக காத்திருக்கிறார்கள் மக்கள். அப்படி வரும்போது அவர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது!