தமிழ்நாடு

வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன் தடை செய்யக் கூடாது?- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

EllusamyKarthik

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பலர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை, காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். இதனைத் தடுக்க வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன் தடை செய்யக் கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையை சேர்ந்த ரமேஷ்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," மதுரையில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் அடையாளச் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. 

வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இருசக்கர வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை நிறுத்தி   பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களும்  கேட்டால் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என கூறுகின்றனர்.  

மற்ற மாநிலங்களில் அதிக அளவு சட்டக் கல்லூரி உருவாகத் தொடங்கியுள்ளதன் காரணமாக ரவுடிகள் பலர் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரியில், பணம் கொடுத்து பட்டங்களைப் பெற்று வழக்கறிஞர் சின்னங்களை வாகனங்களில் பயன்படுத்தி காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வருகின்றனர். எனவே 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய  வழக்கறிஞர்களுக்கு மட்டும், ஸ்டிக்கர்களை வழங்க வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி  அமர்வு,  குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பலர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை, காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். இதனைத் தடுக்க வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன் தடை செய்யக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, தமிழக காவல்துறை தலைவர், அனைத்து வழக்கறிஞர் சங்கங்களையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்ப்பதாகவும், இது குறித்து தமிழக காவல்துறை தலைவர், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.