அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய தலைமுறை
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி! காரணம் என்ன?

PT WEB

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ 44-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் சீத்தாராம் முதன்மை விருந்தினராக பங்கேற்றார். 

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூலம் 1,14,957 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 932 பேர் நேரடியாகவும், 1,13,959 மாணவர்கள் கல்லூரி வாயிலாக பட்டம் பெற்றனர்.‌ 932 மாணவர்கள் ஆராய்ச்சி பிரிவிலும், முதுகலை பொறியியல் பிரிவில் 19,325 மாணவர்களும், இளங்கலை பொறியியல் பிரிவில் 94,699 மாணவர்களும், எம்.எஸ்.பிரிவில் ஒருவரும் பட்டம் பெற உள்ளனர். 66 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான மோதல் காரணமாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.

விழாவில் துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், "முக்கிய பணிகள் காரணமாக விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் கலந்து கொள்ள இயலவில்லை‌. QS வேர்ல்ட் யுனிவர்சிட்டி தரவரிசை 2025 இல், அண்ணா பல்கலைக்கழகம் உலகில் 383-வது இடத்தையும், இந்தியப் பல்கலைக்கழகங்களில் 10-வது இடத்தையும்  பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்

Times Higher Education (THE) World University Ranking (WUR) படி, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் பிரிவில் உலகளாவிய நிறுவனங்களில் 301 - 400 குழுவில் இடம் பெற்றுள்ளது. NIRF தரவரிசை 2023 இல், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் நிறுவனங்களில் 13-வது இடத்திலும், இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் 14-வது இடத்திலும் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் மூன்றாவது சுழற்சியில் A++ தரத்துடன் NAAC ஆல் அங்கீகாரம் பெற்றது” என தெரிவித்தார். 

தொடர்ந்து தேசிய தொழில்நுட்ப கல்வி குழுத்தலைவர் சீத்தாராம் பேசுகையில், “தேசிய கல்விக்கொள்கை 2020 உருவாக்கப்பட்டதன் நோக்கம் உயர்க்கல்வியில் மாணவர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்பதுதான். 2035-ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை (GER) இந்திய அளவில் 50 சதவீதத்தை தொடும்.‌

இதில் 2022-2023 ஆண்டிலேயே தமிழகத்தில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து (GER) 47 சதவீதம் ஆக இருந்தது. இந்த ஆண்டு 50 சதவீதத்தை கடந்துள்ளது. இந்தியாவில் தமிழகம் GER ல் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள தலைவர்கள்தான் அதற்கு காரணம்.

AI தொழில் நுட்பத்தின் முன்னேற்றங்கள் நம்பமுடியாத அளவில் உள்ளது. வரும் காலத்தில் AI செய்யும்  வேலைகளால் சமூகத்தில் அவற்றின் தாக்கம் பற்றிய கவலைகளையும் எழுப்புகின்றன. இயந்திரங்கள் மற்றும் AI அமைப்புகள் மிகவும் நுட்பமானதாக இருப்பதால், சில துறைகளில் வேலைப் பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை உள்ளது

இந்த மாற்றங்களுக்கு பயப்படுவதை விட, நாம் அவற்றைக் கற்றுக்கொண்டு, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான புதிய முறைகளுக்கு நம்மை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்.

AI தொழில் நுட்பம் தொழிலாளர் மற்றும் வேலைகளின் தன்மையை மறுவடிவமைக்கிறது. பட்டதாரிகளான நீங்கள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். புதுமை மற்றும் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாக AIஐ பயன்படுத்த வேண்டும்.

AI

AI கருவி சக்திவாய்ந்த ஒன்றாகும். நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நம் உலகில் அதன் தாக்கத்தை தீர்மானிக்கும். AICTE உருவாக்கிய அனுவாதினி (application) என்பது தொழில்நுட்பக் கல்வியில் மொழித் தடைகளைத் தகர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்புக் கருவியாகும். இது தொழில்நுட்ப ஆவணங்கள், கல்விசார் தகவல்களை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உதவுகிறது, ஆங்கிலத்தில் புலமை இல்லாத இளம் பட்டதாரிகள் தங்கள் தாய்மொழிகளில் கல்விப் கற்பதை உறுதிசெய்கிறது” என்றார்.

பொன்முடி புறக்கணித்தது ஏன்?

இவ்விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்க அலுவல் வேலைகளே காரணம் என சொல்லப்பட்டாலும், அதன் பின் வேறு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. குறிப்பாக கடந்த காலத்தில் சர்ச்சையில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஜெகநாதன் பதவிக்காலத்தை உயர்கல்வி துறையின் எதிர்ப்பை மீறி ஆளுநர் பதவி நீட்டிப்பு செய்தது, ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் உயர்கல்வி குறித்து ஆளுநர் கூறிய கருத்துக்கள் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக இந்த விழாவை பொன்முடி புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே நவ 3, 2023 ல் நடந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நவ 24, 2023 ல் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களையும் அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.