தமிழ்நாடு

“பிரியாணிக் கடையை தாக்கியவர்கள் திமுகவிலிருந்து நீக்கம்” - ஸ்டாலின் எச்சரிக்கை

“பிரியாணிக் கடையை தாக்கியவர்கள் திமுகவிலிருந்து நீக்கம்” - ஸ்டாலின் எச்சரிக்கை

webteam

சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணிக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றில் சிலர் அத்துமீறி அங்குள்ள ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் வெளியானது. சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் கடை ஊழியர்களைத் தாக்கிய அந்தக் கும்பல் தலைமறைவாகிவிட்டது. இது தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடை உரிமையாளர் மற்றும்  ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திமுகவினர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பிரியாணிக் கடை ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. விருகம்பாக்கம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த யுவரஜ், திவாகர் ஆகிய இருவரும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார். 

இதனிடையே, திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழகக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.