தமிழ்நாடு

மூதாட்டி அடித்து கொலை - வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது

webteam

குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

செய்யாறு அருகே புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேகமாக பரவியது. அந்த வீடியோவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டாரத்தில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும்,பெற்றோர்கள் குழந்தைகளை பத்தி‌ரமாக பார்த்து கொள்ளும்படியும் அவர் பேசி இருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவால் உருவான வதந்தியின் காரணமாகவே மூதாட்டி ருக்மணி உட்ப‌ட 5 பேர் மீது பொதுமக்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூதாட்டி ருக்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தைதகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வாட்ஸ் அப் வதந்தியை பரப்பியவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்பியதாக வீரராகவனை அனக்காவூர் காவல்துறையின‌ர் கைது செய்துள்ளனர்.அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.