ஆம்ஸ்ட்ராங்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டாரா ஆம்ஸ்ட்ராங்? மாறி மாறி நடந்த கொலைகள்.. ஆரம்பப் புள்ளி இதுதான்!

PT WEB

ரவுடி ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பழிக்கு பழி தீர்ப்பதற்காகவே பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும், ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்களுக்கும் தீராப் பகையும், மாறா வன்மமும் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பழிதீர்ப்பு படுகொலையின் ஆரம்ப புள்ளி எது.... பார்க்கலாம்...

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்களால் வெட்டிக்கொலை

2000 ஆம் ஆண்டு வடசென்னையின் முக்கிய ரவுடியாக இருந்து வந்திருக்கிறார் நாயுடு. இவரது தீவிர ஆதரவாளர்களாக ஆம்ஸ்ட்ராங், தென்னரசு, பாம் சரவணன் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பூந்தமல்லியில் வைத்து ரவுடி நாயுடுவை, ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து படுகொலை செய்தனர்.

அப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது ஆம்ஸ்ட்ராங், ஆற்காடு சுரேஷ் தரப்புக்கு இடையேயான பகை. தென்னரசு, பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் ஆகிய மூவரும் சேர்ந்து, ஆற்காடு சுரேஷை கொலை செய்ய பல முறை முயற்சித்தும் அவரை நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங் தீவிர அரசியலில் ஈடுபட, பல கட்டப்பஞ்சாயத்துகளில் இரு தரப்பும் அடிக்கடி உரசியதாக தெரிகிறது.

ஆற்காடு சுரேஷ்

இப்படியான சூழலில்தான் 2015ஆம் ஆண்டு தென்னரசுவை, ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை செய்துள்ளனர். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ஆம்ஸ்ட்ராங், ஆற்காடு சுரேஷை தீர்த்துக்கட்ட முழுவீச்சில் தீவிரம் காட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக ஒத்தக்கண்ணு ஜெயபால் என்பவர் மூலம் கூலிப்படையை ஏவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கும்பல்தான், கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் வைத்து ஆற்காடு சுரேஷை தீர்த்துக்கட்டியிருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பழிக்கு பழியான இந்த ஆட்டத்தில் அடுத்ததாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா இறங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு உதவியாக இருந்த திருமலை என்பவர்தான், ஆம்ஸ்ட்ராங்கின் பெரம்பூர் வீட்டின் அருகே கடந்த ஒரு வாரமாக ஆட்டோவை நிறுத்துவது போல நோட்டமிட்டிருக்கிறார்.

ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 5ஆம் தேதியில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள்போல் நடித்து ஆம்ஸ்ட்ராங்கை, ஆற்காடு பாலா தரப்பினர் கொலை செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.