தமிழ்நாடு

விருதுநகர்: விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை... வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு கூமாப்பட்டி பகுதியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கூமாப்பட்டி - பிளவக்கல் அணை செல்லும் கோவிந்தமேடு பாலம், பட்டுப்பூச்சி பாலத்திற்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும், கூமாப்பட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஜப்பார் என்பவருக்கு சொந்தமான தேங்காய் பேட்டைக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. மீராகுசேன் என்பவருக்கு சொந்தமான கடைக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் 100-க்கும் மேற்பட்ட சிமெண்ட் மூடைகள் நாசமானது.