விநாயகர் சிலை ஊர்வலம் pt web
தமிழ்நாடு

விநாயகர் சிலை ஊர்வலம்|”அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே..அசம்பாவிதம் கூடாது”- சென்னை காவல்துறை

ஜெ.அன்பரசன்

பாதுகாப்பு பணிகளில் 18,500 பேர்

விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 7 ம் தேதி நாடு முழுவதும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,524 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பேரில், பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

விநாயகர் சிலை

வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் அனைத்தையும், வருகின்ற 15.09.2024 (ஞாயிறு) அன்று, பாரதிய சிவசேனா அமைப்பினரும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள கடற்கரை நீர்நிலைகளில் கரைக்கவுள்ளனர்.

விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க, சென்னையில் காவல் ஆணையர் மற்றும் 3 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், 2000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

விநாயகர் சிலைகளை, கரைக்க காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட சிலைகரைக்கும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலை கரைக்கும் இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்:

சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதற்கு Conveyar Belt. கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர்கள் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மற்றும் All Terrain Vehicle (Beach Buggles) மூலமும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் வழித்தடங்கள் மற்றும் கரைக்கும் இடங்கள்:

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட

1.சீனிவாசபுரம், பட்டிணப்பாக்கம்,

2.பல்கலைநகர், நீலாங்கரை,

3.காசிமேடு மீன்பிடி துறைமுகம்,

4.திருவொற்றியூர். பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நிறுவியுள்ள விநாயகர் சிலைகளை மேற்படி 4 இடங்களில் கரைக்க சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை. எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சௌகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்.ஜி.ஆர் நகர், வடபழனி, சைதாப்பேட்டை வில்லிவாக்கம், கொளத்தூர். திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்கள் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று பட்டிணப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே போல, அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, இராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர். கொடுங்கையூர் மற்றும் மாதவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் கடலில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.