தமிழ்நாடு

விழுப்புரம்: போலீசார் பொதுமக்களிடையே மோதல்... செஞ்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

kaleelrahman

செஞ்சி அருகே போலீசாருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள மூன்று வாக்குச் சாவடிகளில் காலையில் இருந்து பொதுமக்கள் தீவிரமாக வாக்கு செலுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வாக்காளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தி விட்டு வர வேண்டுமென தேர்தல் விதிமுறை உள்ளது.

இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் வயதானவர்களை வாகனங்களில் கூட்டிவந்து விட்டு வந்தனர். அப்போது வெளிமாநில போலீசார் வாகனங்களை லத்தியால் தட்டியதோடு வாகன கண்ணாடிகளை உடைத்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் லத்தியால் வாக்காளர்களையும் பொதுமக்களையும் அடித்து விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நாங்கள் யாரும் வாக்களிக்க உள்ளே வர மாட்டோம் என்று வெளியே சென்றனர். சுமார் ஒருமணி நேரமாக வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது.