தமிழ்நாடு

விழுப்புரம்: மின்கசிவால் தீப்பற்றி எரிந்த பஞ்சு குடோன்

webteam

விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே கலியமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான இந்தியன் பெட்மார்ட் என்ற கடை இயங்கி வருகிறது. மேலும் அதே பகுதியில் கடைக்கு தேவையான மெத்தை, தலையணை, ஷோபா உள்ளிட்டவை தயாரிக்கப்படும் குடோன் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை உயரழுத்த மின்சாரம் காணமாக மின்கசிவு ஏற்பட்டு பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பஞ்சு குடோன் என்பதால் தீ வேகமாக பரவி குடோன் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விழுப்புரம் தீயனைப்புத்துறை வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 500 பஞ்சு மெத்தைகள், இயந்திரம் என 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மின் மாற்றியில் ஏற்பட்ட உயரழுத்த மின்சாரம் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.