நீலகிரி  முகநூல்
தமிழ்நாடு

நீலகிரி: அடிப்படை வசதிகள் வேண்டி கண்ணீர்மல்க கோரிக்கை வைக்கும் அழகர்மலை மக்கள்! நிறைவேற்றுமா அரசு?

PT WEB

செய்தியாளர்: ஜான்சன்

உதகை அருகே, உல்லத்தி ஊராட்சியில் அமைந்திருக்கிறது அழகர்மலை கிராமம். இந்த ஊரே, செங்குத்தான மலை மீதுதான் அமைந்திருக்கிறது... இதனால், சீரான சமவெளியில் நடைபாதை அமைக்கப்படவில்லை.

நெருக்கடி மிகுந்த சூழலில், மிகவும் ஆபத்தான முறையில் நடைபாதையைக் கொண்டுள்ளது, அழகர்மலை. 500 குடும்பங்களுக்கு மேல் குடியிருக்கும் இந்த ஊரில், செங்குத்தான தடத்திலும் நடைபாதை அமைந்துள்ளது.

இந்தப் பாதையில், சாதாரணமாக நடந்து செல்வதே, கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில்தான் இருக்கிறது. அதனால் உடல்நலம் குன்றியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் நீடிக்கிறது. இறந்தவர்களின் உடலை, தொட்டி கட்டித்தான் சுமந்து செல்கின்றனர் இங்குள்ள மக்கள்.

அப்படி கொண்டு சென்றபோது, கால் இடறி, இறந்தவரின் உடலுடன், அதை சுமந்தவர்களும் பள்ளத்தில் உருண்ட அவலமும் நிகழ்ந்திருப்பதாக கண்ணீர் சிந்துகின்றனர் அழகர்மலை கிராம மக்கள். தடுப்புச்சுவர் கட்டித்தருமாறு பல முறை முறையிட்டும், நடவடிக்கை இல்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அண்மையில், நடைபாதையிலிருந்து பள்ளத்தில் சரிந்து விழுந்து, 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டதாக கண்ணீர் சிந்துகின்றனர் அழகர்மலை மக்கள்.

இதுபற்றி உல்லத்தி ஊராட்சி மன்ற செயலர் சதீஷிடம் கேட்டபோது, அழகர்மலை கிராமம், மலையின் மீது அமைந்துள்ளதால், தடுப்புச்சுவர்கள் கட்டி, நடைபாதை அமைக்க பல கோடி ரூபாய் செலவாகும் என்று கூறினார்.. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மூலமாக அரசிடம் நிதி பெற முயற்சிக்கப்பட்டு வருவதாகவும், நிதி கிடைத்ததும் அழகர்மலையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என்றும் சதீஷ் தெரிவித்தார்.