மறைந்தார் கேப்டன் விஜயகாந்த் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்!

Angeshwar G

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து விஜயகாந்திற்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

விஜயகாந்த்

தகவல் அறிந்ததும் தேமுதிக கட்சி அலுவலகம் முன்பும், அவரது இல்லத்திற்கு முன்பும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும் அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்த்

முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து அவரது உடல் தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைத்தே நாளை மாலை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.