இறந்தவர்  PT
தமிழ்நாடு

வேலூர்: திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு

இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப்போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.

PT WEB

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் சிவா - அமிர்தா தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சரத்குமார் (26) கூலி வேலை செய்து வருகிறார். சரத்குமார் கடந்த சில நாட்களாகவே தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்ற சரத்குமார் நேற்று வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதற்கிடையே தனது தங்கைக்கு போன் செய்து தான் இறக்கப் போவதாக கூறியுள்ளார் அவர். மேலும் அவருடைய whatsapp ஸ்டேட்டஸில் ‘நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப் போகிறேன்’ என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதனை அடுத்து காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சரத்குமாரின் இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்டது. கிணற்றில் சரத்குமார் சடலமாக மீட்கப்பட்டார். காட்பாடி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை மீட்ட விருதம்பட்டு காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த இளைஞர் சரத்குமார்

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் சரத்குமார் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.