தமிழ்நாடு

தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி

rajakannan

அரக்கோணத்தை அடுத்த பணப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிதியுதவி பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். 

அடக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பேசும் போது,  “முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் மூலம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் நிதியுதவிக்காக பரிந்துரை செய்து அறிக்கை செய்துள்ளோம்” என்று கூறினார். 

பணப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் விசாராணை மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமை ஆசிரியை ரமா மணி, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார். மேலும், கூடுதல் விசாரணையானது காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திங்கட்கிழமை மாணவிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.