தமிழ்நாடு

ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக வைத்திருந்த ரூ.52 லட்சத்துடன் மாயமான நபர் கைது

webteam

வேளச்சேரியில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த வாகனத்தோடு ரூ52 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற ஓட்டுநரை போலீசார் மன்னார்குடியில் கைது செய்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி, விஜயநகர் முதல் பிரதான சாலையில் விஜயா வங்கி ஏடிஎம் ஒன்று உள்ளது. இங்கு பணத்தை நிரப்புவதற்காக நேற்று முன் தினம் மாலை சி.எம்.எஸ். என்ற தனியார் நிறுவனம் தி.நகரிலிருந்து 87 லட்ச ரூபாயுடன் 3 பேரை அனுப்பி வைத்தது.

இதில் பணம் ஏற்றி வந்த வாகனத்தை ஓட்டுநர் அம்புரோஸ் என்பவர் ஓட்டி வந்தார். ஏற்கெனவே 5 ஏடிஎம்மில் பணம் நிரப்பிவிட்டு வேளச்சேரியில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது அம்புரோஸ் மட்டும் காரில் இருந்த 52 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமானார்.

இதைத்தொடர்ந்து நான்கு தனிப்படை அமைத்து போலீசார் அம்புரோஸை தேடி வந்த நிலையில் கொருக்கு பேட்டை அருகே கடத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். மேலும் அம்புரோஸின் மனைவி ராணி மேரியின் சகோதரி வீட்டில் இருந்து 32 லட்ச ரூபாயை மீட்டனர்.

இந்நிலையில், மீதமுள்ள 20 லட்சம் பணத்துடன் தலைமறைவான அம்புரோஸ் மன்னார்குடியில் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் 20 லட்சம் குறித்து விசாரித்து வருகின்றனர்.