தமிழ்நாடு

பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் மீது கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்த நபர்

webteam

வத்தலக்குண்டில் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்-ஐ எட்டி உதைத்து கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு - திண்டுக்கல் சாலையில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஏடிஎம்மிற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ஏடிஎம் கார்டை வைத்து பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் வரவில்லை. பலமுறை முயற்சித்தும் பணம் வராததால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்தார். தொடர்ந்து அருகில் இருந்த கல்லை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து விட்டு தப்பி ஓடினார்.

இதனால், அவருக்குப் பின்னால் பணம் எடுக்க வந்த வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சரண் அளித்த புகாரின்பேரில் வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் சேவுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ண மூர்த்தி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.