தமிழ்நாடு

சூர்யா போன்ற இளைஞர்களே தமிழ் சமூகத்தை உயர்த்துவார்கள் ஆதரவு தெரிவித்த வைகோ!

webteam

புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார், மதிமுக பொதுச் செயலாளரான வைகோ.

புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார், நடிகர் சூர்யா. அதில் மும்மொழிக் கல்வி குழந்தையிலேயே திணிக்கப்படுவதாகவும், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுவிட்டதாகவும் ஆவேசமாகவும் பேசினார், சூர்யா. அப்போது அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசியதை பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்றும், எதிர்த்தும் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். தான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு விளக்கமும், ஆதரித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார், சூர்யா. ஒரு குடிமகனாகவே தான் அந்த கருத்தை எடுத்துரைத்தாகவும் கூறினார்.

இந்நிலையில், சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ. அதில் புதிய கல்விக்கொள்கை ஏழை, எளிய மாணவர்களின் கண்களில் மண்ணை வீசுகிறது என்றும், சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன் என்றும் கூறியுள்ளார் வைகோ. அத்துடன் சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள் என்றும், சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் சூர்யாவை ஆதரித்தபோது மகிழ்ந்தேன் என்றும் கூறி தன்னுடைய ஆதரவு குரலை தெரிவித்துள்ளார், வைகோ.