தமிழ்நாடு

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

Rasus

திருவள்ளூர் அருகே சுகாதாரமற்ற குடிநீரை மக்களுக்கு வழங்கியதாக ஊராட்சி செயலாளரை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் வீடு வீடாக சென்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி டெங்கு குறித்த ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரை அவர் ஆய்வு செய்தார். அப்போது அதில், குளோரின் கலக்காதது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொது மக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரை சுகாதாரமற்ற முறையில் வழங்கியதாக ஊராட்சி செயலர் ஜெயசீலியை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்தார்.