தமிழ்நாடு

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

kaleelrahman

அம்பை அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் அருகேயுள்ள வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சவுந்தரராஜன் (72), அழகு திருமலை முத்தம்மாள் (62) தம்பதியர். இவர்களது மகன் சுருளிராஜன் என்பவர் சென்னையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சவுந்தராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கணவர் இழந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி அழகு திருமலை முத்தம்மாள், நேற்று அதிகாலை உயிரிழந்தார். கணவன் இறந்த துக்கத்தில் 12 மணி நேரத்திற்குள் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சாவிலும் இணைபிரியாத தம்பதி என உறவினர்கள் பேசி வருகின்றனர்..