தமிழ்நாடு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் : ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ் விசாரணை

webteam

ஸ்ரீபெரும்புதூர் சித்தேரியில் கைப்பற்றப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாவலூர் பகுதியில் சித்தேரி உள்ளது. இங்கு 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக நாவலூர் கிராம அலுவலர் ரேவதிக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அவர் நாவலூர் சித்தேரிக்கு சென்று பார்த்தபோது, அங்கே ஆண் சடலம் மிதப்பது உண்மை என தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர் உடனே ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த நபர் சில நாட்களாகவே சட்டை அணியாமல், காக்கி கலர் அரை டவுசருடன் சுற்றித் திரிந்ததாக கூறியுள்ளனர். அவர் யாரென்ற முழு விவரம் தெரியவில்லை என்றும், இறந்தவர் ஆடையை கரையிலேயே கலட்டி வைத்துள்ளதால், குளிக்க சென்று தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.