வெள்ளி நீர்வீழ்ச்சி புதிய தலைமுறை
தமிழ்நாடு

கொடைக்கானல்: வெள்ளி நீர்வீழ்ச்சியில் அடித்து வரப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்

PT WEB

செய்தியாளர்: செல்வ. மகேஷ் ராஜா

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்குள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தளமான வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு வரும் ஓடையில், பெண் சடலம் ஒன்று நீரில் அடித்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி நீர்வீழ்ச்சி

அழுகிய நிலையில் அடித்துவரப்பட்ட பெண்ணின் சடலத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் காவல் நிலைய போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சடலமாக கிடந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.