Road accident pt desk
தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை: கட்டுப்பாட்டை இழந்த வேன்... மரத்தில் மோதிய விபத்து! 2 பெண்கள் உட்பட 6 பேர் மரணம்

உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் மரத்தில் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆறுமுகம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 20 பேர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வேன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் சென்னை திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

வேன் மரத்தில் மோதிய விபத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், விபத்தில் காயமடைந்த 14 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.