உயிரிழந்த மாணவர்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

தேனி: நண்பர்களோடு தடுப்பணையில் குளித்தபோது விபரீதம்.. சுழலில் சிக்கி இருவர் உயிரிழந்த சோகம்..!

யுவபுருஷ்

செய்தியாளர் - மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வம் என்பவரது மகன் சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே, நேற்றைய தினம் விடுமுறை என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணைக்கு முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர்.

குளித்துக் கொண்டிருக்கும்போது, தடுப்பணைக்கு முன்புள்ள ஆற்றுசுழலில் சிக்கியதில், லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, உடன் இருந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை காவல்துறையினர், தீயணைப்பு துறை உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய இரண்டு கல்லூரி மாணவர்களின் உடல்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து வைகை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பனையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது