தமிழ்நாடு

சாலையோரம் நின்றிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

kaleelrahman

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து, தமிழ் என்பவர் தனது மனைவியின் தங்கை பவானி, தங்கையின் மாமியார் அருள் அம்மாள், சின்ன மாமியார் ஆனந்த் அம்மாள் உள்ளிட்ட 4 பேருடன் சென்னை வடபழனியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கார் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் விஆர்பி சத்திரம் பகுதியை கடந்தபோது பஞ்சராகி உள்ளது. இதை அடுத்து சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு தமிழ் மற்றும் பவானி ஆகியோர் மட்டும் காரில் இருந்து இறங்கி காரில் உள்ள ஸ்டெப்னி மாற்ற முயற்சி செய்துள்ளனர்.


அப்போது அதிவேகமாக எம்சாண்ட் ஏற்றிவந்த டிப்பர் லாரி காரில் மோதியது. இதில் பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த இருவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.