தமிழ்நாடு

புதுக்கோட்டை: மழையால் சேதமடைந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இரு சிறுவர்கள் பலி !

jagadeesh

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள செட்டித்தெரு விட்டல்தாஸ் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் கறம்பக்குடி பேரூராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர்களுக்கு கிருத்திக்ரோஷன்(6), அரவிந்த் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பகுதியில் இன்று மழை பெய்துள்ளது. மழை நின்ற பிறகு வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியின் மேல் ஏறி கிருத்திக் ரோஷன், அரவிந்த் உள்ளிட்ட இருவரும் விளையாடி வந்துள்ளனர் இந்நிலையில் மழை பெய்ததால் ஊறிப்போய் இருந்த கழிவுநீர் தொட்டி எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்தது இதில் தொட்டியின் மேல் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பேரும் உள்ளே விழுந்துள்ளனர், இதனையடுத்து  விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை காணவில்லை என பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

பின்னர் கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்த்த பொழுது கழிவுநீர் தொட்டியின் உள்ளே சிறுவர்கள் இருவரும் உள்ளே இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு இருவரையும் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.