தமிழ்நாடு

தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் கைது

rajakannan

சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகிய இருவரையும் மெரினா கடற்கரை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த காவலர்கள் கணேஷ், ரகு ஆகிய இருவர் உட்பட 4 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஜாதி ரீதியாக பாகுபாட்டின் அடிப்படையில் தங்களை இடமாற்றம் செய்ய உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகக் கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று கணேஷ், ரகு புகார் அளிக்க வந்தனர். அப்போது, திடீரென பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனையடுத்து அருகில் இருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

காவலர்களின் இந்தச் செயல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி எஸ்பி பாஸ்கரன், ‘இடமாற்றத்திற்கு தவறும், ஒழுங்கின்மையும்தான் அடிப்படை, சாதி ரீதியான பாகுபாடு அல்ல; இருவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் கணேஷ், ரகு மீது ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்’ என்று கூறினார்.  

ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.