தமிழ்நாடு

கடன் பாக்கிக்காக குழந்தைகள் கடத்தல்: மீட்க முடியாமல் தாய் தற்கொலை

Rasus

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடனுக்காக சிறைவைக்கப்பட்ட இரு குழந்தைகளை மீட்க முடியாமல் அவர்களது தாயார் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தல் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி தொந்தீஸ்வரி. இவர் மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. வருமானம் இல்லாததால் தொந்தீஸ்வரிக்கு கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி வீராயி, கடனைத் திருப்பிச் செலுத்துமாறு தொந்தீஸ்வரியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அஞ்சிய தொந்தீஸ்வரி தனது தாய்வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கும் சென்ற வீராயி, தொந்தீஸ்வரியின் இரு குழந்தைகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், தொந்தீஸ்வரியின் சகோதரர், தாய், தந்தையையும் கடத்தி கொம்புக்காரனேந்தல் வீட்டில் சிறை வைத்ததாக தெரிகிறது. மூன்று நாட்களாக போராடியும் குழந்தைகளை மீட்க முடியாததால், தொந்தீஸ்வரி தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த வீராயி, குழந்தைகள் உள்பட அனைவரையும் விடுவித்துவிட்டு தலைமறைவானார். தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.