தமிழ்நாடு

’பள்ளி மாணவிகளை கிண்டல் செய்வதே வேலை’ இப்படியும் ஒரு அண்ணன், தம்பியா?.. போலீசார் அதிரடி

webteam

ஓமலூர் அருகே பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்வதேயே வேலையாக கொண்ட அண்ணன் - தம்பி இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டை மாரியம்மன் கோயில் ஊராட்சியில் செட்டியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயம் செய்துவரும் இவருக்கு 25 வயதில் மாயக்கண்ணன், 22 வயதில் சிவமுருகன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவரை இருவரும் கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். அந்த மாணவி பள்ளி செல்லும்போதும், பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு வரும்போதும் காத்திருந்து அண்ணன் தம்பி இருவரும், தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்மாணவி, இதுகுறித்து தன் தாயிடம் தகவல் தெரிவித்துள்ளார். மகளுக்காக தாய் சென்று இருவரையும் தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அண்ணன் தம்பி இருவரும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து மாணவியின் தாயார் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி அண்ணன், தம்பி இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அண்ணன் மாயக்கண்ணன், தம்பி சிவமுருகன் இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

இந்தநிலையில், ஓமலூர் அருகே சுற்றித்திரிந்த இருவரையும் நான்கு மாதங்களுக்கு பிறகு ஓமலூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.