குற்றம்சாட்டப்பட்டவர்கள் PT
தமிழ்நாடு

திண்டுக்கல்: பெண் சடலத்துடன் சுற்றிய கார்; போலீசார் சோதனையில் மாட்டிக்கொண்ட நபர்கள்.. நடந்தது என்ன?

PT WEB

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்தவர்கள் அருண் ஸ்டாலின் விஜய் (32) மற்றும் அவரது மனைவி பிரின்சி (27). இவர்களுக்கு 6-வயது மகன் உள்ளார். இந்நிலையில் இதே கம்பெனியில் பணியாற்றியவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துரை சேர்ந்த திவாகர் (24) . இவருக்கும் திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், பல்லடத்தில் தங்கி பணியாற்றி வந்த பிரின்சிக்கும் அதே கம்பெனியில் பணியாற்றி வந்த திவாகருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்களின் நெருக்கம் திவாகரின் மனைவிக்கு தெரியவரவே, திவாகர் கடந்த ஒரு மாதமாக பிரின்சியுடனான தொடர்பை துண்டித்ததாக தெரிகிறது. இதனையடுத்து திவாகரிடம் பிரின்சிதொடர்ந்து பணம், நகை கேட்டு தொல்லை கொடுத்ததோடு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திவாகர், பிரின்சியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் உள்ள தனது உறவினர் இந்திரகுமார் (31) என்பவரை பல்லடத்திற்கு ஆம்னி கார் எடுத்து வரச்சொல்லியுள்ளார். பல்லடத்திற்கு காரில் வந்த உறவினரான இந்திரகுமார் மற்றும் திவாகர் ஆகிய இருவரும், பல்லடம் பகுதிக்கு பிரின்சியை வரவழைத்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பிரின்சியிடம், காரில் பரிசுப் பொருட்கள் வைத்திருப்பதாகவும், கண்ணை மூடிக்கொண்டால் அந்த பரிசை சஸ்பென்ஸாக கொடுப்பதாக கூறியுள்ளனர். மகிழ்ச்சியில், திவாகரிடமிருந்து பரிசுப் பொருளை பெறுவதற்காக பிரின்சி கண்ணை மூடிய சமயம், காரில் மறைத்து வைத்திருந்த லைலான் கயிரால் பிரின்சியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை கொலை செய்யப்பட்ட பிரின்சியின் உடலை காருக்குள் வைத்து, அவரை பல்லடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் செல்லும் வழியில் சாலையோரம் ஒரு இடத்தில் புதைக்க முடிவு செய்தனர்.

அதற்காக முன்கூட்டியே மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, இறந்த பிரின்சி உடலை காருக்குள் வைத்து, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கொடைரோடு நான்கு வழி சாலை வழியாக மதுரை நோக்கி சென்றுள்ளனர்.

காரை திவாகரின் உறவினர் இந்திரகுமார் ஓட்டிச் சென்றார். காரை பின் தொடர்ந்து வந்த திவாகர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் இரவில் காரை சாலையோரம் நிறுத்தி, பிரின்சி உடலை புதைக்க திட்டமிட்டதாக தெரிகிறது.

அப்போது, அந்த வழியாக மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற சென்ற அம்மையநாயக்கனூர் போலீசார்,சடலமாக இருந்த பிரின்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியாக கருதப்பட்ட திவாகர் அவரது உறவினர் இந்திரகுமார் ஆகிய இருவரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் சடலத்தை ஏற்றி வந்த கார் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.