அண்ணா நகர் - நாய்க்கடிக்கு உள்ளான சிறுமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | இரண்டரை வயது குழந்தையை கடித்த தெருநாய்... ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு சிகிச்சை!

PT WEB

கடந்த 27ஆம் தேதி, சென்னை அண்ணா நகரிலுள்ள ஜீவன் பீமா நகர் பகுதியைச் சேர்ந்த பிரதீபா என்பவர் தனது குழந்தையுடன் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது தெரு நாய் ஒன்று, திடீரென குழந்தையை கடித்துள்ளது. நாயை விரட்ட முயன்ற பிரதீபாவையும் கடிக்க முயன்றுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து நாயை விரட்டி, குழந்தையை மீட்டுள்ளனர்.

நாய்க்கடிக்கு உள்ளான சிறுமி, தாயுடன்

இந்தச் சம்பவத்தில் கன்னத்தில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாய் கடித்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சியில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், பூங்காவுக்கு சென்ற சிறுமியை வளர்ப்பு நாய் கடித்ததில் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.