த.வெ.க. தலைவர் விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நீட் விலக்கு : “நடந்தாலும் நடக்கவிடமாட்டாங்க..” - தவெக விஜய் அதிரடி பேச்சு!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கடந்த 2023-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதன் முதற்கட்ட விழா சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட விழாவானது இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது.

த.வெ.க. தலைவர் விஜய்

முன்னதாக முதற்கட்டமாக தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இருந்து 127 தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கடந்த ஜூன் 28 ம்தேதி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 3) இரண்டாம் கட்டமான இன்று விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதற்காக, தவெக தலைவர் விஜய் காலை 6 மணி அளவிலே விழா நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்தார்.

அந்தவகையில், 9.30 மணியளவில் விழா இனிதே துவங்கவே.. மாணவ மாணவிகளிடம் விஜய் தனது சிறப்புரையை ஆற்றினார். அதில், “நீட் தேர்வு வேண்டாம்.. மாநிலப்பட்டியலில் கல்வியை சேர்க்க வேண்டும்” என விஜய் அதிரடியாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும்... அவர்களின் பெற்றோர்களுக்கும்... தமிழக வெற்றி கழகத்தின் தோழர்களுக்கும் என் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நண்பா.. நண்பிகளுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.

இன்று நான் எதையும் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இதை பேசாமல் போனால் சரியாக இருக்காது என்று தோன்றியதால்தான் இப்பொழுது பேச வந்துள்ளேன். என்னவாக இருக்கும் என்று நீங்களே கணித்திருப்பீர்கள்.. நீட்.... நீட் குறித்துதான் நான் பேச வந்துள்ளேன்.

நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு குறிப்பாக கிராமப் புறத்தில் இருக்கும் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட ,மிகுவும் படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ மாணவிகள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் தவிர்க்க முடியாத உண்மை.

நீட் குறித்து மூன்று விதமான பிரச்னைகளாக நான் பார்ப்பது என்னவென்றால்..

1) நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது. 1975 க்கு முன்பு, கல்வி என்பது மாநில பட்டியலில்தான் இருந்தது. மத்திய அரசு வந்தபிறகு பொது பட்டியில் கல்வி சேர்க்கப்பட்டது. இதுதான் முதல் பிரச்னை.

2) ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு என்பதை அடிப்படையாகவே, கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ற போல பாடத்திட்டங்கள் என்பது அமைந்திருக்க வேண்டும். இதை நான் மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை.

கல்வி என்பது, பல்வேறு கண்ணோட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர, பலவீனம் என்று சொல்ல முடியாது.

த.வெ.க. தலைவர் விஜய்
மாநில மொழியில் படித்து விட்டு, NCERT syllabus ல் தேர்வை வைத்தால் எப்படி? அதுவும் கிரமப்புறத்தில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு இது எவ்வளவு கடினமான விஷயம்.

3) கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்ததை பல செய்திகளில் நாம் கேட்டிருக்கிறோம். இதன்பிறகு, நீட் தேர்வின் மீது இருந்த நம்பகத்தன்மையே மக்களிடத்தில் இருந்து சென்று விட்டது.

நாடு முழுக்க நீட் தேர்வுகள் தேவை இல்லை என்பதுதான் இந்த செய்திகளின் மூலம் நாம் புரிந்து கொண்ட விஷயம்.

ஆக, இதற்கு என்னதான் தீர்வு?

த.வெ.க. தலைவர் விஜய்
நீட் விலக்குதான் தீர்வு...!

நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு கால தாமதம் எதுவும் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதை கூடியவிரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கான நிரந்தர தீர்வுதான் என்ன?

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதற்கு ஏதேனும் சிக்கல்கள் இருப்பின்.. இடைக்கால தீர்வாக.. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொது பட்டியல் பிரிவை உண்டாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.

ஆனால், இப்பொழுது உள்ள பொதுப் பட்டியலில் பிரச்னைகள் என்னவென்றால்... துறைகளில் மாநில அரசுக்கு எவ்வளவுதான் அதில் அதிகாரம் இருந்தாலும்.. இது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே மாநில அரசுக்கு இந்த சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

த.வெ.க. தலைவர் விஜய்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு வேண்டுமானால் நீட் தேர்வில் நடத்திக் கொள்ளலாம். நான் சொல்வதெல்லாம் என்னுடைய வேண்டுகோள்தான். இது நடக்குமா? .. நடக்காது என்பது எனக்கு தெரியும். அப்படியே நடந்தாலும், அது நடக்க விடாமல் செய்வார்கள் என்பதும் எனக்கு தெரியும்.

என்னைப் பொறுத்தவரை, இது குறித்து நான் பகிர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். நீட் குறித்து இதுதான் என்னுடைய கருத்து.

Learning is fun.. Education is celebration..

Jolly-யா படிங்க.. இந்த உலகம் மிகவும் பெரியது.. வாய்ப்புகள் அதிகம் கொட்டி கிடக்கிறது.. எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம். ஒரு வாய்ப்பு உங்களை விட்டு நழுவுகிறது என்றால், கடவுள் அடுத்த வாய்ப்பை அவர் கையில் வைத்து காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் ,வெற்றி நிச்சயம்!” என்று பேசினார்.