தவெக தலைவர் விஜய் முகநூல்
தமிழ்நாடு

வெளியானது ‘முதல் மாநாடு’ தேதி அறிவிப்பு: “தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக...” - தவெக தலைவர் விஜய்!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் வருகின்ற செப் 23 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் கடந்த ஒரு மாதமாகவே பல தகவல்கள் வெளியாகி வந்தன. இதை உறுதிசெய்யும்வகையில், தவெக சார்பிலும் காவல்துறையிடத்தில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தபின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த்.

இந்நிலையில், வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதி ‘தவெகவின் முதல் மாநாடு’ நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

தவெக தலைவர் விஜய்

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!

நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!!” என்று தெரிவித்துள்ளார்.