School pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி: சரியாக படிக்காத மாணவர்களை அடித்து உதைத்தாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

webteam

செய்தியாளர்: மணிசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பியபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 3 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இந்தப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு பயிலும் மாணவர்களில் 7 பேர், விடுமுறை தினங்களில் பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்கச் சென்றதற்காக பள்ளியில் பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியர் அவர்களை அடித்துள்ளார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Name board

பெற்றோர் தரப்பில், “ஆசிரியர் அடித்ததால் எங்களது குழந்தைகளின் உடலில் தடிப்புகள் ஏற்பட்டு அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் குற்றச்சாட்டினை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்பிரச்னை குறித்து பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் ராதிகா கூறியபோது, “பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்கச் சென்ற குழந்தைகள் உள்பட 7 மாணவர்களை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் குழந்தைகள் படிக்கவில்லை என்றால் செருப்புக் காலால் மாணவர்களை மிதித்துள்ளார். ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடை மாற்றம் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

School Building

இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது “ஒரு ஆசிரியராக என்னுடைய கடமையைதான் செய்தேன், என் மீது என்ன என்ன குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர் என்பது தெரியவில்லை, அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அதிகாரிகளிடம் என் தரப்பு விளக்கத்தை எடுத்துக் கூறுவேன்” என்றார். இதற்கிடையே ஆசிரியர் ராதாகிருஷ்ணன் விடுமுறையில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.