உண்ணாவிரதம் pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி|"1.5 கோடி அபராதம் எப்படி கட்ட முடியும்” - ஆதங்கத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

webteam

செய்தியாளர்: ராஜன்

தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த மகாராஜா மற்றும் தேன் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப் படகுகளில் தலா 22 மீனவர்கள் வீதம் கடந்த ஜூலை 20ஆம் தேதி ஒரு படகிலும் 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கடந்த (05.08.2024) அன்று கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேரையும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 20.08.2024 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

உண்ணாவிரதம்

இந்நிலையில், செப் 3ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.. அப்போது, 12 பேருக்கும் தலா 1.5 கோடி ரூபாய் (இலங்கை பணம்) செலுத்துமாறும் செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 10 பேருக்கு இம்மாதம் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறும் நீதிபதி அயோனா விமலரத்ன உத்தரவிட்டார். இதுகுறித்து, தருவைகுளம் கிராம மக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களின் உறவினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமொழி எம்பி, ஆகியோருக்கு மனுக்களை அளித்தனர்.

இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி அக்கிராமத்தில் பதற்றமான சூழ்நிலையே நிலவிவந்தது.

இதையடுத்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராம மக்கள் 1,000க்கும் மேற்ப்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் தருவைகுளம் கிராமத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு 250 விசைப்படகுகள், 350 நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் வெளிப்படுத்திய வேதனையை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.