தமிழ்நாடு

காவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்

webteam

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை கணிசமாக அதிகரித்ததால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்களை அப்பகுதி மீனவர்கள் அள்ளிச் சென்றனர்.

கடந்த சில மாதங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சொற்ப அளவில் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்தேக்க பகுதி முழுவதுமாக வறண்டு விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாடக அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. 

மேட்டூர் அணைக்கு புது தண்ணீர் வந்ததால் கால்வாயில் இருந்த சிறிய வகையிலான சோனா கெளுத்தி, சொட்டவாள, ஆரால் உள்ளிட்ட மீன்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள், டன் கணக்கில் கரையொதுங்கிய மீன்களை, கூட்டம் கூட்டமாக வந்து அள்ளிச் சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற மீன்கள் விற்பனை செய்ய முடியாது என்றாலும், காயவைத்து கருவாடாக விற்பனை செய்யலாம். 

இதனால் மீனவர்கள் ஆவலுடன் சிறிய வகை மீன்களை எடுத்துச் சென்றனர். அதேசமயம் அணையின் மீன்வளம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மீன்வளத் துறை சார்பாக, காவிரி நீர்தேக்கப் பகுதியில் மீன் குஞ்சுகளை விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.