தமிழ்நாடு

‘எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்’- புகழேந்தி சர்ச்சைக்கு தினகரன் பதில்

webteam

புகழேந்தி விவகாரத்தில் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சியினருடன் அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேசிய வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ''இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன்''  எனப் பேசினார். 

இது குறித்து பேசிய புகழேந்தி, அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு பேசியதாகவும், முழு வீடியோவை வெளியிட வேண்டும், அதனைப் பார்த்தால் முழுமையாக புரியும் என்று தெரிவித்தார். இது அமமுக கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அமமுகவில் இருந்து பலர் வெளியேறி வரும் நிலையில் புகழேந்தியும் கட்சியை விட்டு வெளியேற போகிறாரா என பலரும் சந்தேகம் கிளப்பியுள்ளனர். 

இந்நிலையில் புகழேந்தி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், ''புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்