தமிழ்நாடு

`இனி குப்பைகளை பணமாக்கலாம்!’- திருச்சி மேயர் தொடங்கிவைத்த அசத்தல் திட்டம்

நிவேதா ஜெகராஜா

திருச்சி மாநகராட்சி குடியிருப்புகளில் உபயோகமற்று இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இரும்பு, அலுமினியம், எவர்சில்வர், பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றை, 15 நாட்களுக்கு ஒருமுறை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் 'தி மணி பின்' (The Money Bin) திட்டத்தினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கிவைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் சேகரிக்கப்டும் உபயோகமற்ற பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம், நகரின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். மேலும் உபயோகமற்ற பொருட்களை சேகரித்து, அதனை மாநகராட்சி ஊழியர்களிடம் முறையாக ஒப்படைப்படைப்பதன் மூலம், குடியிருப்புவாசிகளுக்கு நிர்ணயிகிக்கப்பட்ட வருவாய் கிடைக்கும். குப்பையை பணமாக்கும் ஒரு புதிய திட்டத்தை 'தி மணி பின்' என்ற நிறுவனத்தோடு சேர்ந்து திருச்சி மாநகராட்சி செயல்படுத்த தொடங்கியுள்ளது.

வீடுகள்தோறும் சென்று சேகரிக்கக் கூடிய ஒவ்வொரு கிலோ பழைய பொருட்களுக்கும் ₹12 நிர்ணயிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பணியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களையும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் இன்று முதல் கட்டமாக மாநகராட்சி மேயர் அன்பழகன் வெற்றி பெற்ற, மாநகராட்சி 27வது வார்டில் உள்ள பட்டாபிராமன் சாலையில் தொடங்கப்பட்டது.

அங்குள்ள வீடுகளில் உள்ளவர்களிடம், எளிதில் மக்கும் குப்பைகளை சேகரித்து வைக்க மஞ்சள் நிற பைகளை வழங்கி, இத்திட்டத்தை மேயர் அன்பழகன் துவங்கி வைத்தார். வீட்டில் அன்றாடம் சேரக்கூடிய பழைய பொருட்களை மஞ்சப் பைகளில் சேகரித்து வைக்க வேண்டும். அதனை மகளிர் சுய உதவிக் குழுவினர் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரடியாக வந்து பெற்றுக்கொள்வார்கள்.

இதன் மூலம் மாநகராட்சியில் வழக்கமாக சேகரிக்கப்படும் குப்பையின் எடையளவு குறைந்துவிடும். மக்கும் குப்பைகள் மட்டுமே தினசரி சேகரிக்க கூடிய நிலை ஏற்படும் என்றார். இந்த திட்ட துவக்க விழாவில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவி குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

- லெனின்