கோவை, மதுக்கரை  ptweb
தமிழ்நாடு

வயிறு உபாதைக்கு எடுத்துக்கொண்ட மருந்து! இறுதியில் நேர்ந்த சோகம்-பயிற்சி மருத்துவருக்கு நடந்தது என்ன?

PT WEB

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மயக்க மருந்து அதிகமாக எடுத்துக்கொண்டதால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல தனது உறவினர் வீட்டில் இருந்து மதுக்கரை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது, தனக்கு வயிறு உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மருந்து எடுத்துக் கொள்வதாகவும் அங்கிருந்த செவிலியர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மருந்து எடுத்துக்கொண்ட பின் பயிற்சி மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு அவர் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சக பயிற்சி மருத்துவர்கள் அங்குச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மருத்துவர் உயிரிழந்து கிடந்ததைக் கண்ட அவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சந்தோஷின் உடலை காவல்துறையினர் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஊசி மூலம் மயக்க மருந்து அதிகளவில் எடுத்துக் கொண்டதால், சந்தோஷ் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.