Relatives pt desk
தமிழ்நாடு

திருப்பத்தூர்: திருமணமான ஒரே ஆண்டில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு

webteam

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி. இவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கும் வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

புவனேஷ்வரி - சுதாகர்

சுதாகர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், புவனேஸ்வரி 102 ரெட்டியூர் பகுதியில் உள்ள தனது மாமியர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று புவனேஷ்வரி, வீட்டில் உள்ள தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்காயம் காவல்துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புவனேஸ்வரியின் உறவினர்கள், சுதாகரின் வீட்டை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் காவலர் எடுத்த இம்முடிவு குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.