Tragedy pt desk
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 2 குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்

webteam

செய்தியாளர்: ச.குமரவேல்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியைச் சேர்ந்தவர்கள் பரமசிவம் - புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு தினேஷ் (11), சுப்ரியா (10), ரஞ்சித்குமார் (9) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் தினேஷ் (11) மற்றும் அவரது தங்கை சுப்ரியா (10) ஆகிய இருவரும், வீட்டின் அருகே உள்ள மீன் குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அண்ணன் -தங்கை இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அண்ணன் - தங்கைக்கு நேர்ந்த துயரம்

வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் குழந்தைகளை அவரது தந்தை பரமசிவம் மீன் குட்டை அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி காவல் துறையினர், இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நெமிலி காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன் குட்டையில் மூழ்கி அண்ணன் - தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.