தமிழ்நாடு

செங்கல்பட்டு பாலாற்றுப் பாலத்தில் வாகன நெரிசல்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Veeramani

செங்கல்பட்டு பாலாற்று பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், நள்ளிரவு வரை நீடித்ததால் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டில் பாலாற்றின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்ததால், பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அதனால், அருகே உள்ள புதிய பாலத்தில் மட்டும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்து பழையசீவரம் வழியாக கனரக வாகனங்கள், பேருந்துகள் திருப்பிவிடப்பட்டன.

அதேநேரத்தில் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மெய்யூர், பிலாப்பூர் வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமே புதிய பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.