தமிழ்நாடு

ஊட்டி: படகுசவாரிகளில் ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்

Sinekadhara

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீஸனின் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சி நடைபெற்ற 20 முதல் 24ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் ஊட்டி படகு இல்லத்திற்கு 54,864 சுற்றுலாப் பயணிகளும், பைக்காரா படகு இல்லத்திற்கு 5,066 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம், மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகைபுரிந்து இங்குள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீஸன் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய சுற்றுலாத் தலங்களான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக ஊட்டியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஊட்டி படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. 20 முதல் 24ஆம் தேதி வரையிலான மலர்கண்காட்சிக்காக உதகைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டினர். அதன் படி இங்குள்ள மிதவை படகு, துடுப்பு படகு, இயந்திரப் படகு உள்ளிட்ட படகுகளில் சவாரி செய்ய 5 நாட்களில் 54,684 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதேப் போன்று பைக்காரா படகு இல்லத்தில் 5066 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். நீலகிரியில் உள்ள காலநிலை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் இங்குள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதிலும் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.