தமிழ்நாடு

உதகையில் களைகட்டிய சீசன்; நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

நிவேதா ஜெகராஜா

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளதை அடுத்த உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்து வருகின்னர்.

இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிந்து இங்கு உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களான உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

குறிப்பாக உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதில் உதகை படகு இல்லத்தில் உள்ள மிதவை படகு, துடுப்பு படகு, இயந்திரப் படகு உள்ளிட்ட படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் இம்முறை கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.