தமிழ்நாடு

நடராஜன் உடல் இன்று நல்லடக்கம்

நடராஜன் உடல் இன்று நல்லடக்கம்

Rasus

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சசிகலா கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கு தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது. நடராஜனின் மறைவையடுத்து 15 நாட்கள் பரோலில் ‌வந்துள்ள அவரது மனைவி சசிகலாவும் தஞ்சாவூர் சென்றடைந்தார்.

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 16-ஆம் தேதி சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நடராஜன் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு நடராஜனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கு செய்வதற்காக சென்னையில் இருந்து அவரது உடல் நேற்று பிற்பகலில் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் சசிகலா வெளியே வந்தார். அவர் சாலை மார்க்கமாக பெங்களூருவிலிருந்து தஞ்சாவூர் சென்றார். இன்று மாலை 4.30 மணிக்கு நடராஜன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.